எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் - இலங்கை நீதிமன்றம்
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று கடந்த 12ஆம் தேதி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 மீனவர்களின் வழக்கு இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜமீல் எட்டு மீனவர்களும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மீனவர்கள் இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அதேபோல் படகு ஓட்டுனர்கள் இருவருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.60.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதலாக நான்கு மாதங்கள் என மொத்தமாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு படகு உரிமையாளர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்