பெரியார் குறித்து சர்ச்சை கருத்து: சீமான் மீது தமிழ்நாட்டில் 61 வழக்குகள் பதிவு!
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பூதாகரமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் தனித்தனியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புகார்கள் தொடர்பாக கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வரை சீமான் மீது 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சீமான் மீது புகார்கள் குவிந்து வருவதால், வழக்குப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.