
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், 3 இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி செல்லவே, ஒருகட்டத்தில் முன் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.
லாரி வளைவில் அவர்கள் முந்திய போது, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், அவர்கள் மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தயாளன் (19), சார்லஸ் (21), ஜான் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.