விருதுநகர் வெடிவிபத்து | 23 பேர் உயிரிழந்த சோகம்.. மீட்புப் பணியின்போது மீண்டும் வெடித்த பட்டாசுகள்!
விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று அந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தசூழலில் தான், இன்று பிற்பகலில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில், 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்திருக்கிறது. 6 பேர் மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தான், அதே இடத்தில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், மீட்புபணி வீரர்கள் 8 காயமடைந்திருக்கின்றனர். அடுத்தடுத்த, வெடிவிபத்துக்களால மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, இந்த வெடிவிபத்து குறித்து எஸ்.பி. ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, “அனுமதி வாங்கியே பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ஆனாலும், ஞாயிற்றுக் கிழமை பட்டாசு செயல்பட்டிருப்பதன் மூலம், விதிகள் மீறப்பட்டிருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பட்டாசுகள் உராய்வின் காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது.

