தூத்துக்குடி | இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் - கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள்!
செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகிய விசைப்படகு உரிமையாளர்களின் விசைப்படகில் 22 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களையும் இலங்கை சிறையில் அடைத்தனர். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் மீனவர்கள் வாடி வந்த நிலையில், தருவைகுளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மகாராஜா என்பவரது விசைப் படகில் சென்ற 12 மீனவர்களை புத்தளம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களும் இலங்கையில் இருந்து நேற்று மாலை விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இதன் பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.
100 நாட்களுக்கு பின் இலங்கைச் சிறையில் இருந்து வந்த மீனவர்களை தருவைகுளம் மீனவ கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். இதையடுத்து இலங்கைச் சிறையில் வாடி வரும் மீதமுள்ள 10 மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.