ஷேன் வார்னே மரணம் | பாலியல் மாத்திரை காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி, தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தகவல் வெளியானது. அவருடைய மறைவு கிரிக்கெட் உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. என்றாலும், அவருடைய மரணம் தொடர்பாக அவ்வப்போது பல செய்திகள் வெளியாகி வருகின்றன. 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் (AMPS) தலைவரான மருத்துவர் கிறிஸ் நீல் மற்றும் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் ஷேன் வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ததில் அவருக்கு இதய நோய் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது என தெரிவித்த அவர்கள், ”ஏற்கனவே கண்டறியப்படாத லேசான இதய நோய் உள்ளவர்களுக்கு, ஒரு கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியானது, அவர்களின் உடல்நிலையில் விரைவான முடுக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஷேன் வார்னே மரணம் தொடர்பாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. ஷேன் வார்ன் இறந்துகிடந்த வில்லாவில் இருந்து உடலுறவுக்கான மாத்திரை பாட்டில் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை போலீசார் மறைத்ததாகவும் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் செய்தியில், ’தாய்லாந்தில் ஷேன் வார்னே தங்கியிருந்த வில்லாவில் உடலுறவுக்குத் தேவையான மாத்திரைகள் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி காமகிரா (Kamagra) பாட்டில் சிக்கியது. இதில் சில்டெனாபில் சிட்ரேட் (Sildenafil Citrate) உள்ளது. இது வயாக்ராவின் மூலப்பொருளாகும். மேலும், அந்த பாட்டிலில் மாத்திரைகள் இருந்துள்ளன. இந்த மாத்திரை என்பது அதிக பாலியல் சக்தியைக் கொடுக்கக்கூடியது. ஷேன் வார்னே இறந்தவுடன் அவரது வில்லாவில் மூத்த போலீஸ் அதிகாரி சென்று பார்வையிட்டார். அப்போது இந்த மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது. அதனை உடனடியாக அகற்றும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து காவல் துறை அதிகாரிகள், “எங்கள் மூத்த அதிகாரிகள் பாட்டிலை அகற்றும்படி எங்களுக்கு உத்தரவிட்டனர். அதன்பேரிலேயே நாங்கள் அகற்றினோம். மாத்திரையை அகற்ற ஆஸ்திரேலியா அதிகாரிகள்கூடக் கூறியிருக்கலாம். ஷேன் வார்னேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கான காரணம் எதுவும் அறிக்கையில் இல்லை. இயல்பு நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. காமக்ரா மாத்திரை அவரது மரணத்துக்கு காரணம் என்று உறுதி செய்யப்படவில்லை. ஏனென்றால் அது மிகவும் சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட். இதற்கு பின்னால் பெரிய நபர்களின் கைகள் இருந்தன. மேலும் காமக்ரா பாட்டிலில் இருந்து அவர் எவ்வளவு எடுத்துக்கொண்டார் என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் வாந்தி மற்றும் ரத்தக் கறையும் இருந்தது, ஆனால் எங்களுக்குச் சொன்னபடி காமக்ராவை நாங்கள் அப்புறம் படுத்தினோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காமக்ரா என்பது ஆண்மைக் குறைவு சிகிச்சைக்காக உட்கொள்ளப்படும் ஒரு இந்திய மருந்து மற்றும் வயாக்ராவில் காணப்படும் அதே மூலப்பொருளைக் கொண்டுள்ளது. இது தாய்லாந்தில் சட்டவிரோதமானது என்று கூறப்பட்டாலும், அங்கு இந்த மருந்து பரவலாகக் கிடைக்கிறது. இருப்பினும், இதயப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது. பிறவியிலேயே இதய பலவீனம் உள்ளவர்கள் காமக்ராவை எடுத்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.