ரசிகர்கள் உயிரிழப்பு | RCB நிர்வாகிகளுக்கு ஜாமீன்!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர, கர்நாடக உயர்நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று விசாரித்து வருகிறது. முன்னதாக, விசாரணை தொடர்பாக ஆர்சிபி அணியின் உரிமையாளரான ஆர்சிபிசிஎல் நிறுவனத்தின் மார்க்கெடிங் மேலாளர் நிகில் சோஸலே, இயக்குநர் சுனில் மேத்யூ, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் குமார், தனிநபர் சேவை வழங்குநர் ஷமந்த் என்.பி உள்ளிட்ட நால்வரை கர்நாடக காவல்துறை ஜூன் 6 அன்று கைது செய்தது. கைதான 4 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமீன்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “பெங்களூரு நெரிசல் உயிரிழப்புகளுக்கு காரணம் யார் என்பதை அரசு இன்னும் முறையாக விசாரிக்கவில்லை. அதற்குள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தவறு செய்திருப்பதற்கு எந்த முகாந்திரத்தையும் முன்வைக்காமல் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பதுடன், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.