ரசிகர்கள் உயிரிழப்பு |கர்நாடக கிரிக்கெட் உயர் அதிகாரிகள் ராஜினாமா!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
இந்த விவகாரத்தில், போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கர்நாடகாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஏ.சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ்.ஜெய்ராம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தங்களுடைய ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்குமாறு அவர்கள் சங்க தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.