நடப்பு டி-20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் அங்கிருந்து தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. பார்படாஸில் நிலைமை சீரடைந்த நிலையில் 5 நாட்கள் தாமதத்திற்கு பிறகு நேற்று தாயகம் புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்க நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். வழிநெடுகிலும் ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நட்சத்திர ஓட்டல் வந்தடைந்த இந்திய வீரர்களுக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்க புறப்பட்டனர். அப்போது ஓட்டல் நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் வெட்டினர்.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையுடன் திரும்பிய இந்திய அணியின் இந்த வெற்றியை பாராட்டிட, வெற்றி நாயகர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் பிரதமர் மோடி.
பின்னர், இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி, சிறப்பு விருந்தளித்தார். இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த கலந்தாய்வில், முதல் கட்டத்தில் இந்திய அணி வீரர்களையும், இந்திய அணியின் பயிற்சியாளரையும் சந்தித்து கலந்துரையாடினார் பிரதமர்.
இரண்டாம் கட்டமாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்கள் என பலரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், கிட்டதட்ட 1 மணி நேரம் நடைப்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.