ENGWvINDW| கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றது. இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுற்ற நிலையில், 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கிய நிலையில், இந்தியா முதல் போட்டியிலும் இங்கிலாந்து இரண்டாவது போட்டியிலும் வென்று தொடர் 1-1 என சமனில் இருந்தது. இந்த நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 பவுண்டரிகளுடன் 82 பந்தில் சதமடித்து அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய 7வது சதமாகும். மறுபக்கம், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீசிய எல்லோரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர், கடினமான இலக்கை நோக்கிய விளையாடிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. எனினும், எம்மா லேம்ப் (68), ப்ரூண்ட் (98), சோபிகா (34), ரிச்சர்ட்ஸ் (44) ஆகியோரின் நிலையான ஆட்டத்தால் அணி நிமிர்ந்தது. ஆயினும் இறுதியில் அவ்வணி வீராங்கனைகள் சோபிக்கத் தவறியதால் அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து அந்த அணி, 49.5 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. தவிர, ஒருநாள் தொடரையும் வென்றது. மேன் ஆப் மேட்ச் மற்றும் மேன் ஆப் சீரிஸ் ஆகிய இரு விருதுகளையும் இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் தட்டிச் சென்றார்.