ஒரு சகாப்தத்தின் முடிவு.. முடிவுக்கு வந்த ரொனால்டோவின் பயணம்.. இறுதிவரை நிறைவேறாத கனவு!
2003ல் ஸ்போர்ட்டிங் கிளப்பில் 17 வயது இளைஞராக மான்செஸ்டர் யுனைடெட்டின் கவனத்தை கவர்ந்த ரொனால்டோ, அங்கு FA, பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக், கிளப் உலகக்கோப்பை வெற்றிகளால் உலக நட்சத்திரமாக உயர்ந்தார். பின்னர் ரியல் மாட்ரிட், யுவெண்டஸ், மீண்டும் யுனைடெட், அல் நாசர் என கிளப் பயணத்தில் சாதனைகள் குவித்த அவர், பாலன் டி ஓர் போட்டியில் மெஸ்ஸியுடன் கால்பந்தின் சகாப்தத்தை உருவாக்கினார்.
2003-ம் ஆண்டு போர்ச்சுகலின் பிரபலம் வாய்ந்த ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கும் உலகின் மிகப்பெரிய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் ஒரு நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்காக ஆடிய ரொனால்டோ என்ற 17 வயது சிறுவனின் ட்ரிபிளிங் மற்றும் கோல் அடிக்கும் திறமை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவான் மேலாளர் சர் அலெக்ஸ் பெர்குசனை கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்திடம் சர் அலெக்ஸ் பெர்குசன் பேசி ரொனால்டோவை உடனடியாக வாங்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி மான்செஸ்டர் அணி 120 கோடி கொடுத்து ஸ்போர்ட்டிங் அணியிடமிருந்து ரொனால்டோவை வாங்கியது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தான் இணைந்த முதல் ஆண்டுலேயே FA கோப்பையை அணிக்காக வென்றுகொடுத்த ரொனால்டோ, குறுகிய நாட்களிலேயே அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். இங்கிலாந்தின் மிக உயரிய லீக் தொடரான பிரீமியர் லீக் தொடரை மான்செஸ்டர் யுனைடெட் அணி 3 முறை வெல்ல ரொனால்டோ முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதோடு 2008-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும், கிளப் உலகக்கோப்பையையும் வென்று அசத்தினார்.
இந்த 2008 சீசனில் அவரின் அந்த பங்களிப்புக்காக கால்பந்தில் மிக உயரிய விருதான பாலன் டி ஓர் விருது ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இந்த விருதை மெஸ்ஸி வெல்ல, உலகின் மிகப்பெரிய தனிநபர் மோதலாக கருதப்படும் மெஸ்ஸி - ரொனால்டோ மோதல் அந்த தருணத்தில் உருவானது.
இந்த மோதலை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் விதமாக மெஸ்ஸி ஆடிய பார்சிலோனா அணியின் பரம எதிரியான ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோவை 650 கோடி கொடுத்து வாங்கியது. அதன் பின்னர் ஸ்பெயினின் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் உலக புகழ்பெற்ற எல் கிளாசிகோ மோதல் மெஸ்ஸி - ரொனால்டோ மோதலாக மாறியது.
2009, 2010,2011, 2012 ஆகிய ஆண்டுகளில் பாலன் டி ஓர் விருதை மெஸ்ஸி வெல்ல, 2013,2015, 2016,2017 ஆகிய ஆண்டுகளில் அந்த விருதை ரொனால்டோ வென்று பதிலடி கொடுத்தார். அதோடு ரியல் மாட்ரிட் அணிக்காக 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், 3 கிளப் உலகக்கோப்பை கோப்பைகளை வென்று கொடுத்து தான் உலகின் மிக சிறந்த வீரர் என்பதை ரொனால்டோ நிரூபித்தார்.
பின்னர் 2018-ம் ஆண்டு இத்தாலியின் புகழ்பெற்ற யுவெண்டஸ் அணி 850 கோடி கொடுத்து ரொனால்டோவை வாங்கிய நிலையில், அந்த அணிக்காகவும் அவர் 2 லீக் கோப்பைகளை வென்று கொடுத்தார். தொடர்ந்து தனது 35-வது வயதில் மீண்டும் தன்னை உருவாக்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணியில் அவர் 2021-ம் ஆண்டு இணைந்தார். ஆனால், அங்கு ரொனால்டோ அணி நிர்வாகத்தில் மோசமாக நடத்தப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டில் அவர் சவூதி அரேபியாவின் அல் நாசர் அணியில் இணைந்து தற்போதுவரை அங்கு அவர் விளையாடி வருகிறார்.
ரொனால்டோவின் கிளப் பயணம் இப்படி இருக்க, அவரின் சர்வதேச கால்பந்து பயணம் அவரின் கிளப் கோப்பைகளை விட பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ரொனால்டோவின் வருகைக்கு முன்னர் அந்த அணியில் பல்வேறு பல்வேறு ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும் அவர்களால் போர்ச்சுகல் அணிக்கு எந்தவித கோப்பையையும் வென்று தர முடியவில்லை.
ஆனால், 2016-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணியின் இந்த குறையை ரொனால்டோ முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த யூரோ கோப்பையே போர்ச்சுகல் அணி வென்ற முதல் சர்வதேச கோப்பையாகும். அதோடு நிற்காத ரொனால்டோ ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே புதிதாகத் தொடங்கப்பட்ட நேஷன்ஸ் லீக் கோப்பையை 2019, 2025 என இருமுறை போர்ச்சுகல் அணிக்கு வென்று கொடுத்தார்.
போர்ச்சுகல் அணி 1966-ம் உலகக்கோப்பையில் 3-ம் இடம் பிடித்து இருந்தாலும் அதன் பின்னர் பல முறை உலககோப்பைக்கு தகுதி பெறவே போராடி வந்தது. ஆனால் ரொனால்டோ வருகைக்கு பின்னர் அனைத்து உலககோப்பைகளுக்கும் போர்த்துக்கல் அணி தகுதி பெற்றது. 5 உலககோப்பைகளை போர்ச்சுகல் அணி வெல்லாத நிலையில், இந்த உலகக்கோப்பையே ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பை என கூறப்பட்டது. இதனால் இந்த முறை உலகக்கோப்பையை ரொனால்டோ வெல்வார் என உலகமே எதிர்பார்த்தது. எனினும் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி தோல்வியை தழுவி வெளியேறிய நிலையில், ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்பெயின் அணியுடனான போட்டிக்கு பின்னர் இதுவே தனது இறுதி உலகக் கோப்பை என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்திய நிலையில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை என்பதால் போர்ச்சுகல் அணிக்காக தொடர்ந்து அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரொனல்டோ உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றாலும், 6 உலககோப்பைகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்து தான் கால்பந்தின் ஜாம்பவான் வீரர் என்பதை உலகுக்கே ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

