சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் 2024: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லக்ஷ்யா சென்!
2024 சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பிவி சிந்து, லக்ஷ்யா சென், ட்ரீசா-காயத்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியிருந்தனர். இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் மீது அனைவருடைய கவனமும் இருந்தது.
இந்த இரண்டு வீரர்களும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது மட்டுமில்லாமல், ட்ரீசா-காயத்ரி ஜோடியும் முதல்முறையாக சையத் மோடி சர்வதேச பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.
நெர் செட் கணக்கில் வென்ற லக்ஷ்யா சென்..
சையத் மோடி இன்டர்நேஷனல் 2024 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான லக்ஷ்யா சென் மற்றும் நான்காவது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் ஜேசன் தே இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடினர்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 31 நிமிடங்களில் முதல் இரண்டு செட்களையும் 21-6, 21-7 என சுலபமாக வென்று தான் ஏன் முதல்நிலை வீரர் என்பதை நிரூபித்தார். இது லக்ஷ்யா சென் வெல்லும் முதல் சையத் மோடி சர்வதேச பட்டமாகும்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்..
மற்றொரு இறுதிப்போட்டியான பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் நிலை வீராங்கனையான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீன ஜோடியான பாவ் லிஜிங் மற்றும் லி கியானை எதிர்கொண்டு விளையாடியது. முதல் செட்டில் 6-6 என்ற நிலையில் போட்டி விறுவிறுப்பாக சென்ற போது இந்திய ஜோடி 21-18 என முடிவில் கைப்பற்றியது.
அதன்பிறகு நடந்த இரண்டாவது செட்டில் 21-11 என கைப்பற்றிய இந்திய ஜோடி, முதல் இரண்டு செட்களையும் 21-18, 21-11 என கைப்பற்றி தங்களுடைய முதல் BWF டூர் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.