இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் டாம்மி ப்யூமண்ட்(Tammy Beaumont) மற்றும் கேப்டன் ஹீதர் நைட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில்160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டாமி ப்யூமண்ட் 62 ரன்களும், ஹீதர் நைட் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 161 ரன்களை இலக்காக கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடியது. தொடக்கம் முதலே இந்திய மகளிர் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. கேப்டன் மந்தனா வெறும் 2 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா மற்றும் சிகா பாண்டே ஆகியோரின் பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இது டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக பெறும் ஐந்தாவது தோல்வியாகும். ஏற்கெனவே நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 போட்டிகள் அனைத்திலும் இந்திய மகளிர் அணி தடுமாறி தோல்வியடைந்தது. அந்தத் தொடரிலும் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.