இந்திய கால்பந்தாட்டத்தின் கதாநாயகன் சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்தாட்டத்தின் கதாநாயகன் சுனில் சேத்ரி!
இந்திய கால்பந்தாட்டத்தின் கதாநாயகன் சுனில் சேத்ரி!

இந்தியாவில் கிரிக்கெட் கதாநாயகர்களை மட்டுமே பெரும்பாலான மக்களுக்கு தெரியும். அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. இதனால் உலகளவில் அதிக ரசிகர்கள் கொண்டாடும் கால்பந்தாட்டத்துக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகளவில் இல்லை என்று சொல்ல முடியாது; மாறாக அந்த ஆட்டத்துக்கான வெளிச்சம் பெரியளவில் பாய்ச்சப்படாமல் இருந்தது என கூறலாம். ஆனால் இப்போது அது மாறிவிட்டது, இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பிரதானமாக இருந்த கால்பந்தாட்டம் இப்போது ஐஎஸ்எல் போன்ற லீக் தொடர்களால் பிரபலமடைந்திருக்கிறது.

இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருத்தப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு இப்போது பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி. இப்போது இந்திய கால்பந்தாட்ட அணி உலகக் கோப்பை கால்பந்தாட்ட தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்துடன் மோதியது. இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது இந்தியா.

இந்த 2 கோல்களையும் அடித்தவர் இந்தியாவின் கேப்டன் சுனில் சேத்ரி. இந்த 2 கோல்களால் வேறு சாதனையும் படைத்திருக்கிறார் சுனில் சேத்ரி. அது சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸியினை முந்தியிருக்கிறார். இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த சர்வதேச நடப்பு வீரர்கள் வரிசையில்  2ம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் சுனில் சேத்ரி.

உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 72 கோல்களுடன் 2ம் இடத்தில் இருந்த அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை பின்னுக்குதள்ளிவிட்டு, சுனில் சேத்ரி 74 கோல்களுடன் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் தற்போது போர்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ 103 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். சுனில் சேத்ரி செய்துள்ள இந்தச் சாதனையால் ஒட்டுமொத்த இந்திய கால்பந்தும் புத்துணர்வு பெரும். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சுனில் சேத்ரி?

சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை கே.பி.சேத்ரி. இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின்தான் அவருக்கு பிடித்த வீரர். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். "கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்" என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர். ஆனால் கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாததால் எனது கிரிக்கெட் கனவை கலைத்து விட்டு கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தியாக சுனில் சேத்ரியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

முதல் முறையாக சுனில் சேத்ரி 2001 இல் தாய்லாந்தில் நடைபெற்ற ‘ஆசிய ஸ்கூல் சாம்பியன்ஷிப்’ தொடரில் சேத்ரி ஸ்கோர் செய்த நான்கு கோல்கள் அவரது விளையாட்டு கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. சேத்ரி மேற்குவங்கத்தின் புகழ்ப்பெற்ற ‘மோகன் பகான்’ கிளப் அணியில் விளையாடி தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தன்னை தகவமைத்துக் கொண்டு இளையோருக்கான இந்திய கால்பந்தாட்ட அணியில் விளையாடவும் செய்தார். அப்படியே சீனியர் கல்பாந்தட்ட அணியில் மாற்று வீரராக இருபது வயதில் இணைந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் பைசுங் பூட்டியா இல்லாததால் முன்கள வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக சேத்ரி உருவானார். அதன் பின்பு இப்போது நடைபெறுவது வரை எல்லாமே வரலாறுதான். பைசுங் பூட்டியாவின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி செல்லும் வாய்ப்பை பெற்றார் சேத்ரி. அவரது தலைமையில் பல முக்கியமான தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இப்போது சேத்ரிக்கு 36 வயதாகிறது, எப்போது வேண்டுமானாலும் அவர் ஓய்வை அறிவிக்கலாம், ஆனால் அவரை முன்மாதிரியாக கொண்டு பல சுனில் சேத்ரிகள் இந்தியாவுக்கு கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- ஆர்.ஜி.ஜெகதீஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com