2025 கோ கோ உலகக் கோப்பை | அறிமுக சீசனிலேயே உலகக்கோப்பை வென்று இந்திய ஆடவர் அணி சாதனை!
சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக 'கோ கோ' உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் புதுடெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கும் கோ கோ உலகக்கோப்பையில், 20 ஆண்கள் அணிகள் மற்றும் 19 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மொத்தமுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதனைத்தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என நடைபெற்று இறுதிப்போட்டியானது ஜனவரி 19ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டது.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில், பூடான் முதலிய அணிகளுடனும், பெண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் ஈரான், மலேசியா, கொரியா குடியரசு முதலிய அணிகளுடனும் இடம்பெற்றன.
இந்நிலையில் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் நேபாள அணிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டி அசத்தின.
முதல் உலகக்கோப்பை வென்றது இந்திய ஆடவர் அணி..
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்தியா vs நேபாளம் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் முதலில் நடத்தப்பட்ட பெண்கள் இறுதிப்போட்டியில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் சீசனிலேயே உலகக்கோப்பை வென்று மகுடம் சூடியுள்ளது பிரியங்கா இங்கிள் தலைமையிலான இந்திய மகளிர் அணி.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் அணிக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரதீக் வைகர் தலைமையிலான இந்திய அணி தொடக்கமுதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் சுற்றில் இந்தியா 26-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது சுற்றிலும் நேபாள அணியால் முன்னேற முடியவில்லை. இரண்டாவது சுற்று முடிவில் 44-18 என போட்டி மாற, மூன்றாவது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி முதல் கோகோ உலகக்கோப்பையை தட்டிச்சென்றது.
அறிமுக உலகக்கோப்பையில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன.