டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடுமா..? வெள்ளிக்கிழமை PCB இறுதி முடிவு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். வங்கதேசத்தை ஐசிசி நீக்கியதை கண்டித்து, பாகிஸ்தானும் வங்கதேசத்திற்கு ஆதரவாக நிற்கும் நிலையில், இறுதி முடிவு வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது.
அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக் குழு மூலம் ஆய்வுநடத்தி, இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.
ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தசூழலில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணியும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என பதிலளித்துள்ளார்.
வெள்ளிக் கிழமை முடிவெடுக்கும் பிசிபி..
முதலில் வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் உலகக்கோப்பையை புறக்கணிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், வங்கதேசத்தை ஐசிசி நீக்கியபோதும், வங்கதேசத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி.
ஒருவேளை பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்தபோது, அடுத்த 2 நாட்களிலேயே டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு பேசியிருக்கும் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷெரீப்புடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். ஐ.சி.சி விவகாரம் குறித்து அவருக்கு விளக்கமளித்தேன். அனைத்து விருப்பங்களையும் பார்த்து தீர்க்குமாறு அவர் உத்தரவிட்டார். இறுதி முடிவு வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை எடுக்கப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

