டி20 உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகுமா..? PCB தலைவர் பதில்!
வங்கதேசம் டி20 உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு அநியாயம் செய்யப்பட்டது எனக் கூறி, பாகிஸ்தானும் புறக்கணிக்குமா என்பது அரசின் முடிவில் உள்ளது என தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது.
அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக்கு குழு மூலம் ஆய்வுநடத்தி, இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.
ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தசூழலில் ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அணியும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானும் புறக்கணிக்குமா..?
வங்கதேசத்தை ஐசிசி நீக்கியது குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, வங்கதேசத்திற்கு ஐசிசி அநியாயம் செய்துள்ளது. ஐசிசி கூட்டத்திலும் நான் இதையே தான் சொன்னேன், உங்களால் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்க முடியாது.
ஒரு அணி எப்போது வேண்டுமானலும் என்ன முடிவென்றாலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள். ஆனால் மற்றொரு அணி அதைசெய்தால் அதற்கு அனுமதி கிடையாது.
அதனால் தான் நாங்கள் வங்கதேசத்தின் பக்கம் நிற்கிறோம், அவர்கள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். வங்கதேசம் ஒரு முக்கியமான அணி, அவர்களுக்கு இப்படியான அநீதி செய்யக்கூடாது
வங்கதேசத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தானும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்குமா என்பது அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்” என பேசியுள்ளார்.

