மகளிர் ஆசிய கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்!
2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று துபாயில் மோதுகின்றன. 7 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியனான இலங்கை ஆகியவை பட்டத்தை நோக்கி பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தானை தகர்த்த இலங்கை என இரு அணிகளும் உச்சநிலையிலேயே இறுதிக்குள் நுழைந்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய அணிகள் பங்கேற்று விளையாடிய 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. துபாயில் நடந்துவரும் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா 36 பந்தில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உதவியுடன் 47 ரன்கள் அடித்து ஸ்கோரை 130 ரன்களாக உயர்த்தினார். அதைத்தொடர்ந்து இலங்கை அணி 33 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆனால் வெற்றிபெறும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அதற்குபிறகு இலங்கையை கட்டுப்படுத்த தவறியது. பாகிஸ்தான் கேப்டன் 47 ரன்கள் அடித்ததோடு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்ஹ்டி வெற்றிக்காக போராடினார். இறுதியில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தசூழலில் இன்று நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7 முறை கோப்பை வென்றிருக்கும் இந்தியாவும், நடப்பு சாம்பியனான இலங்கையும் கோப்பைக்காக மோதவிருக்கும் நிலையில், போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

