ENG வெல்ல 35 ரன்கள்.. IND வெல்ல 4 விக்கெட்டுகள்.. யாருக்கு வெற்றி? த்ரில் முடிவை நோக்கி 5வது டெஸ்ட்!
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ’ஆண்டர்சன் - டெண்டுல்கர்’ கோப்பைக்கான தொடரில் விளையாடிவருகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி வலுவான சண்டையை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டு வீரர்களும் சேர்ந்து இந்த ஒரே தொடரில் 50 அரைசதங்களையும், 21 சதங்களையும் பதிவுசெய்து அசத்தியுள்ளனர்.
ஆனால் அணியில் இருக்கும அனுபவமின்மை மற்றும் கேப்டன்சி முதிர்ச்சி இல்லாமை வெற்றியின் பக்கம் இருந்தபோதும் இந்தியாவை 2 போட்டிகளில் தோல்விக்கு அழைத்துச்சென்றது.
இந்த சூழலில் தொடரில் 1-2 என பின்தங்கியிருக்கும் இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்ய போராடிவருகிறது.
த்ரில்லிங் முடிவை நோக்கி 5வது டெஸ்ட்..
லண்டன் ஓவலில் தொடங்கிய 5வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்தை 247 ரன்னுக்கு சுருட்டிய இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து அசத்தியது.
இதன்மூலம் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 106 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 19 ரன்னில் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்ச்சை பவுண்டரி லைனில் பிடித்த முகமது சிராஜ், பந்தை பிடித்துவிட்டு பவுண்டரி லைனில் காலை வைத்து முக்கியமான விக்கெட்டை தவறவிட்டார்.
அதற்குபிறகு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். ஆனால் முக்கியமான தருணத்தில் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரையும் அவுட்டாக்கிய இந்திய அணி மீண்டும் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்துள்ளது.
4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 339/6 என முடித்துள்ளது. இங்கிலாந்து வெற்றிபெற 35 ரன்களும், இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகளும் தேவையாக இருப்பதால் 5வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒருவேளை இந்திய அணி ஒரு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் பட்சத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும. இல்லையென்றால் இங்கிலாந்து 3-1 என தொடரை வெல்லும்.
கடைசியாக 2021-ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்திருந்தது.