கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பையை வெல்வது என்பது ஒவ்வொரு வீரருக்கும் மட்டுமில்லாமல் ஒவ்வொரு அணிக்கும்கூட பெரிய கனவாகவே இருக்கும். கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் படைத்து ஜாம்பவானாக வலம் வரும் பல வீரர்களுக்கும் எட்டாத மகுடமாக உலகக்கோப்பை இருந்துள்ளது, இருந்தும் வருகிறது.
வரலாற்றில் பல சாதனைகளை வாரிக்குவித்து கிரிக்கெட்டின் கடவுளாக இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்குகூட கடைசி உலகக்கோப்பை தொடரில்தான் உலகக்கோப்பையை கையில் ஏந்தும் பாக்கியமே கிடைத்தது.
அப்படி சச்சினின் கடைசி உலகக்கோப்பையான 2011 உலகக்கோப்பையை வென்றதற்கு பிறகு சக இந்திய வீரர்கள் அனைவரும் டெண்டுல்கரை தோளில் சுமந்து கிரவுண்டை வலம் வந்தனர். இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் ஒரு வீரருக்கு அப்படிப்பட்ட வழியனுப்புதல்தான் சிறந்ததாக இருந்தது.
இந்நிலையில் சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டை கீழே விடாமல் தாங்கிப்பிடித்திருப்பது ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலிதான். சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக 77 சதங்களை குவித்திருக்கும் விராட் கோலிக்கும் சச்சினை போலான வழியனுப்புதல் இருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோலி குறித்து கிறிக்பஸ் உடன் பேசியிருக்கும் வீரேந்தர், “2019 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்டதால் சீக்கு (கோலி) ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்த ஆண்டு உலகக்கோப்பையில் அவர் பல சதங்களை அடித்து அதிக ரன்கள் குவித்தவராக தொடரை முடிப்பார் என்று நம்புகிறேன். கோப்பையை வென்றதற்கு பின்னர், கோலியை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தை சுற்றி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இதேபோலான ஒரு கருத்தை உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடும் விழாவிலும் சேவாக் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவையும் புகழ்ந்து பேசியிருந்த சேவாக், “ரோகித் ஷர்மா 2011 உலகக் கோப்பையில் விளையாடவேண்டும் எனும் வேட்கையோடு இருந்தார், ஆனால் அவரால் விளையாட முடியாமல் போனது. அதற்கு பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளின் பாட்ஷாவாக உருவெடுத்தார். அவருடைய அபாரமான திறைமைக்காகவே உலகக்கோப்பையை வெல்ல தகுதியானவர் ரோகித். இந்த இரண்டு (ரோஹித்-கோலி) மூத்த வீரர்களும் உலகக் கோப்பையை வெல்ல தகுதியானவர்கள்” என்று கூறியுள்ளார் வீரேந்தர் சேவாக்.