"எனது கனவு நாயகனின் சாதனையை சமன் செய்ததில் பெரும் மகிழ்ச்சி" - விராட் கோலி
ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து டெண்டுல்கர் செய்த சாதனையை விராட் கோலி சமன் செய்த பின், “சச்சின் டெண்டுல்கர் அளவுக்கு என்னால் சிறப்பாக ஆட இயலாது” என தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி முடிவில் பேசிய கோலி, “டெண்டுல்கர் எனது கனவு நாயகன். அவரை போன்று என்னால் ஒருபோதும் ஆட முடியாது. ஆனால் அவரது சாதனையை சமன் செய்தது பெரு மகிழ்ச்சி தருகிறது. டெண்டுல்கர் விளையாடும் போது அதை டிவியில் பார்த்து ரசித்திருக்கிறேன். அவரது ஆட்டமே எனக்கு ஊக்கமாக அமைந்தது. அவர்தான் என்னுடைய ஹீரோ“ என்று குறிப்பிட்டார்.
முன்னதாக விராட் கோலியின் சாதனையை டெண்டுல்கர் எக்ஸ் சமூக தளம் மூலம் பாராட்டியிருந்தார். பிரதமர் மோடி, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ஆகியோரும் கோலியை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

