முத்தரப்பு தொடர்| இறுதிவரை போராடிய இலங்கை அணி.. கடைசி 2 ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
முத்தரப்பு தொடரின் அறிமுகப்போட்டியில் இந்தியா ஏ, இலங்கை ஏ அணிகள் கடுமையாக போராடின. கெய்க்வாட் சதம், திலக்வர்மா அரைசதம் உதவியுடன் இந்தியா 277 ரன்கள் எடுத்தது. இலங்கை ஏ அணிக்காக திக்வெல்லா, அவிஷ்கா, சதீரா, கேப்டன் சஹான் அரச்சிகே ஆகியோர் தொடர்ந்து ரன்கள் சேர்த்தும், கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஷத் கான் 49வது ஓவரில் 3 விக்கெட்டுகளை களைந்து இந்தியாவை நெருக்கடியான வெற்றியினை நோக்கி அழைத்துச் சென்றார்.
இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நேற்று தொடங்கியது.
தொடரின் அறிமுகப்போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி 3 பவுண்டரிகளுக்கு வெளியேறினார், பிரப்சிம்ரனும் அடுத்து அவுட்டாக, நல்ல தொடக்கம் கொடுத்த பிரியான்ஸ் ஆர்யாவும் 32 ரன்னில் நடையை கட்டினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் திலக்வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர். திலக்வர்மா 60 ரன்னில் ஆட்டமிழக்க, இறுதிவரை சிறப்பாக விளையாடி சதமடித்த கெய்க்வாட் இந்தியாவை 277 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.
278 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை ஏ அணியின் டாப் 5 வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை வெற்றியின் பக்கமே இருந்தது. திக்வெல்லா 47, அவிஷ்கா 45, சதீரா 46 மற்றும் கேப்டன் சஹான் அரச்சிகே 75 ரன்கள் என அடிக்க எப்படியும் இலங்கையே வெற்றிபெற போகிறது என்ற நிலையே இருந்தது.
கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் அடிக்கவேண்டும் இலங்கையின் கையில் 3 விக்கெட்டுகள் உள்ளது என்ற நிலையில், 49வது ஓவரை வீசிய அர்ஷத் கான் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா த்ரில் வெற்றியை பதிவுசெய்தது.

