U19 உலகக்கோப்பை வென்ற தமிழக வீரர்கள்.. பரிசுத் தொகை வழங்கி TNCA கௌரவிப்பு!
2026 யு19 உலகக்கோப்பையில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. தமிழக வீரர்கள் அம்பிரிஷ் மற்றும் தீபேஷ் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவர்களை 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவித்தது.
ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்ற 2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய யு19 அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியின் 175 ரன்கள் ஆட்டத்தால் 411 ரன்களை குவித்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 311 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.
100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 6வது முறையாக யு19 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் ஆர் எஸ் அம்பிரிஷ் 3 விக்கெட்டுகளும், தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு பங்காற்றினர்.
இந்நிலையில் இந்திய யு19 அணியில் இடம்பெற்று கோப்பை வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவித்துள்ளது.

