RCB-க்காக யுவராஜ் சிங், ஏபிடி வில்லியர்ஸ் செய்த சாதனை.. 3வது வீரராக டிம் டேவிட் செய்த சம்பவம்!
ஐபிஎல் 19வது சீசனில் ஆர்சிபி அணி சிஎஸ்கேவுக்கு எதிராக 250 ரன்கள் குவித்து பரபரப்பை கிளப்பியது. கடைசி 5 ஓவரில் 97 ரன்கள் வந்த நிலையில், டிம் டேவிட் 25 பந்தில் 70 ரன்கள், 8 சிக்சர்களுடன் வெடிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி தங்களுடைய முழுபலத்துடன் 2வது முறையாக கோப்பையை தக்கவைக்க சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மறுபக்கம் ஆர்சிபிக்கு சவால் கொடுக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் சிறந்த அணிகளாக இருக்கின்றன.
இந்தசூழலில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 250 ரன்களை குவித்த ஆர்சிபி பேட்டிங்கில் மரண அடி கொடுத்தது. பேட்டிங்கில் கடைசி 5 ஓவரில் 97 ரன்களை குவித்த ஆர்சிபி அணியில், அதிரடி வீரர் டிம் டேவிட் மட்டும் 25 பந்தில் 70 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார். அவருடைய ஆட்டத்தில் 8 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.
இந்தசூழலில் ஆர்சிபிக்காக பிரத்யேக சாதனை படைத்த வீரராக யுவராஜ் சிங், ஏபிடி வில்லியர்ஸுக்கு பிறகு மாறியுள்ளார் டிம் டேவிட்.
யுவராஜ் சிங், ஏபிடி வரிசையில் டிம் டேவிட்..
சிஎஸ்கேவிற்கு ஒரு மறக்கமுடியாத இரவை பரிசளித்த டிம் டேவிட், ஆர்சிபி ரசிகர்களுக்கு தங்களுடைய வாழ்நாளில் சிறந்த இரவை பரிசளித்தார். 280 ஸ்ட்ரைக்ரேட்டில் 3 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என துவம்சம் செய்த அவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்தசூழலில் ஆர்சிபி அணிக்காக நம்பர் 5 பேட்ஸ்மேன் அல்லது அதற்கு கீழாக விளையாடி ஒரே இன்னிங்ஸில் 8 சிக்சர்கள் அடித்து பிரத்யேக சாதனை படைத்தார். இந்த சாதனையை இதற்கு முன்னர் யுவராஜ் சிங்கும், ஏபிடி வில்லியர்ஸும் படைத்தனர்.
2014ஆம் ஆண்டு ஆர்சிபிக்காக விளையாடிய யுவராஜ் சிங் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 9 சிக்சர்களை பறக்கவிட்டார். அதேபோல 2014ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ஏபிடி வில்லியர்ஸ் ஒரே இன்னிங்ஸில் 8 சிக்சர்களை பறக்கவிட்டார். அவர்களை தொடர்ந்து அந்தப்பட்டியலில் டிம் டேவிட்டும் இணைந்துள்ளார்.

