ஆசியக் கோப்பை விவகாரம் | அன்று மைதானத்தில் என்ன நடந்தது? - திலக் வர்மா பகிர்ந்த நடந்த உண்மை!
ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) ஆதரவாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் களமிறங்கியுள்ளன. இது நக்விக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே, ஆசியக் கோப்பை தொடர்பாக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்குக் கடிதம் எழுதியது. அதற்குப் பதிலளித்த நக்வி,’வரும் நவம்பர் 10ஆம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். அப்போதும், கோப்பையை தாம்தான் வழங்குவேன் என நக்வி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டாலும், இந்தியா இதில் பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஐசிசியின் ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார். பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், இந்திய அணி கோப்பையைப் பெற ஒரு மணி நேரம் மைதானத்தில் காத்திருந்ததாக திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நாங்கள் உண்மையில் ஒரு மணிநேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளைப் பார்த்தால், நான் தரையில் படுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். மீதமுள்ளவர்களும் தரையில் படுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் ரீல்கள் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாங்கள் காத்திருந்தோம், 'கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, கோப்பை எங்கும் கிடைக்கவில்லை. நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் கோப்பை எங்கும் கிடைக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைப் பெறப் போவதில்லை என்பதை அறிந்ததும், அர்ஷ்தீப் சிங்தான் ஒரு ஐடியா கொடுத்தார். ’கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும்’ என்று அவர் கூறினார். அபிஷேக் சர்மா உள்ளிட்ட நாங்கள், மேலும் 5-6 பேருடன் சேர்ந்து, அதற்கு ஒப்புதல் அளித்தோம். பின்னர் அதையே நிகழ்த்திக் காட்டினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

