உலக ஸ்கேட்டிங்.. சாம்பியன் ஆன தமிழக வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சாம்பியனான தமிழக வீரர் ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், செங்டுவில் நடந்த உலக விளையாட்டுப் போட்டிகளில் 1,000 மீட்டர் ஓட்டத்தில் ஆனந்த்குமார் வென்றிருந்தார். இந்தப் போட்டிகளில் ரோலர் விளையாட்டுகளில் இந்தியாவின் முதல் பதக்கம் அதுவாகும். அதற்கு முன்பு, 2021ஆம் ஆண்டு, ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 15 கிமீ எலிமினேஷன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3,000 மீட்டர் அணி ரிலேவில் இந்தியாவின் வெண்கலப் பதக்கத்திற்கு அவர் பங்களித்தார்.
ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மற்றும் கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்கள் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தும் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆனந்த்குமார் வேல்குமாரின் திறமையும் நம்பிக்கையும் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துள்ளன. தற்போது அவர் உலக சாம்பியன் ஆனது மூலம் இந்திய ரோலர் விளையாட்டுகளுக்கு இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்டில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவருக்கும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். ஆனந்த்குமார் வேல்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.