T20 WC | சொந்த மண்ணிலேயே இலங்கையை சுருட்டிய ZIM.. சாதனையுடன் பி பிரிவில் முதலிடம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இலங்கையை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி, அதன் சொந்த மண்ணிலேயே அதை வீழ்த்தி, குரூப் பி பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. முன்னதாக, இவ்வணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதால் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. இதற்கிடையே டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றையப் போட்டியில், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக பவன் ரத்நாயக்க 25 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே அணிக்குத் தொடக்க வீரர் பிரையன் பென்னட் நங்கூரமாக நின்று ஆடி 63 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம், அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்தார். இறுதியில் 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி இந்த தொடரில் தோல்வியே அடையாமல் சாதனை படைத்துள்ளது. தவிர, தாம் இடம்பிடித்த பி பிரிவிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், போட்டியை நடத்தும் இலங்கையும் இடம்பிடித்துள்ளன. முன்னதாக, ஜிம்பாப்வேயின் நுழைவால் ஆஸ்திரேலிய அணி, சூப்பர் 8 தகுதிச் சுற்றை இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

