T20 WC | AUSவை வெளியேற்றிய மழை.. சூப்பர் 8இல் முதல்முறையாக நுழைந்த ZIM!
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் ஜிம்பாப்வே முன்னேறி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. அதேநேரத்தில் புள்ளிப் பட்டியலில் பின்தங்கியிருந்த ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. பிற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வகையில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இன்று நடைபெறுவதாக இருந்தது. மேலும் இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்பையும் பூர்த்தியிருந்தது. காரணம், இலங்கையிடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டியை நம்பியிருந்தது.
இதில் ஜிம்பாப்வே தோல்வியுற்றால், தாம் அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடலாம் என கனவு கண்டது. ஆனால், அதன் கனவை இன்று பெய்த மழை கலைத்துவிட்டது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இன்று மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியாவைவிட முன்னணியில் இருந்த ஜிம்பாப்வே அசால்ட்டாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவோ போட்டியிலிருந்து வெளியேறியது. ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகளில் 2இல் வென்று ஐந்து புள்ளிகளையும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் மட்டுமே வென்று இரண்டு புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்த அணி, தனது கடைசி லீக் போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது. இவ்வணியை ஆஸ்திரேலியா வீழ்த்தினாலும் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியாது. காரணம், அதன் புள்ளி எண்ணிக்கை 4 ஆகத்தான் இருக்கும். ஆனால், ஜிம்பாப்வே இதைவிட ஒரு புள்ளி அதிகமாக உள்ளது. டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணி சூப்பர் எட்டு அல்லது இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

