T20 WC | சதமடித்த பர்ஹான்.. சூப்பர் 8க்குள் சுலபமாய் நுழைந்த பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் நமீபியாவை, பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. பிற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வகையில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இதனமூலம் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன்னாகவும் பதிவானது.
முன்னதாக, 2016ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக 201 ரன்களை எடுத்திருந்தது. மேலும், அவ்வணியில் அதிகபட்சமாக பர்ஹான் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் சதமடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக அகமது ஷெஹ்ஷாத் 2014ஆம் ஆண்டு சதமடித்திருந்தார். பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் லோரன் ஸ்டீன்காம்ப் 23, அலெக்சாண்டர் வோல்ஷெங்க் 20 ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

