நீட் போராட்டம் | மத்திய அரசை எதிர்க்காமல்.. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஷுப்மன் கில்!
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. எனினும், அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது அவர்களைத் தடுக்கும் நோக்கில், காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியது. இது, விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பிறகு பல்வேறு தரப்பினரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ஷுப்மன் கில்லும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “ஓர் இளம் இந்தியனாக, நமது தலைமுறையினர் கல்வி கற்கவும், கனவுகளை நோக்கிச் செல்லவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உண்டு. அமைதியான வழியில் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கும் ஒவ்வோர் இளைஞரையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.
மரியாதையுடனும், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் இதில் இருந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார். ஆனால், அவரது பதிவில், யாரையும் குறிப்பிட்டோ அல்லது எதையும் சுட்டிக்காட்டியோ பதிவிடவில்லை என்பது குறிப்பிடவில்லை. ஆனாலும் பயனர்கள் அவர் மத்திய அரசுக்கு எதிராகவே இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாகக் கருதுகின்றனர். முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், யுவராஜ் உள்ளிட்டோரும் மாணவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.

