\
Shreyas Iyer Says on England Vs T20 series Loss
shreyas iyerx page

இங்கிலாந்திடம் தோல்வி.. 2 தொடர்களும் இழப்பு.. வித்தியாசமான காரணம் சொன்ன இந்திய கேப்டன்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், தொடரையும் இழந்தது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 4ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்தும், சமனுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின.

எனினும், நேற்றைய போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி, தொடரையும் இழந்தது. மேலும் இந்தத் தோல்வியின் மூலம், ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு விளையாடிய முதல் 6 போட்டிகளில் 5-இல் தோல்வியடைந்து, ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் தவித்து வருகிறார். மேலும், தனது கேப்டன்சி பயணத்தின் முதல் இரண்டு இருதரப்பு தொடர்களையுமே (அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து) இழந்த முதல் இந்திய கேப்டன் என்ற பரிதாப சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். மேலும், கௌதம் கம்பீரின் புதிய பயிற்சி முறைகள் மற்றும் ஸ்ரேயாஸின் பலவீனமான கேப்டன்சி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Shreyas Iyer Says on England Vs T20 series Loss
IND Vs ENG | தொடரும் சோகம்.. தொடரை இழந்த IND.. 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் அதே வரலாறு!

இதற்கிடையே தோல்வி குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “என் ஆட்டத்திறனில் நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன், ஆனால், அது வெற்றிக்கு வழிவகுக்கவில்லை என்றால், அது வீணாகிவிடும். அந்த விஷயத்தில் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஏனென்றால் நான் விளையாடும் போதெல்லாம், சிறப்பாகச் செயல்பட்டு என் அணி வெற்றி பெறுவதை உறுதி செய்யவே விரும்புவேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அப்படி ஒரு நாளாக அமையவில்லை.

அடுத்த ஆட்டத்தை நிச்சயமாக ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். தட்பவெப்ப நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப விளையாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டு, தங்களது தவறுகளிலிருந்து மிக வேகமாகப் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Shreyas Iyer Says on England Vs T20 series Loss
IND Vs ENG | இந்தியாவுக்கு மேலும் சிக்கல்.. காயத்தால் வெளியேறிய 2 முக்கிய பவுலர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com