IND Vs ENG | தொடரும் சோகம்.. தொடரை இழந்த IND.. 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் அதே வரலாறு!
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அதிலும் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெறும் 76 ரன்களில் சுருண்டு சாதனை படைத்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அதிலும், இந்திய கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், தனது 5 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறவில்லை. இதனால், அணி மீதும் அவர் மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதற்கிடையே, பிரிஸ்டலில் நேற்று நடைபெற்ற 4-ஆவது டி20 போட்டியில் இரு முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி களம் இறங்கியது.
காயம் காரணமாக ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி விலகியதை அடுத்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். இந்தப் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து, டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இந்த வீரர்கள், பெரிய அளவில் சோபிக்கவில்லை.
குறிப்பாக, சூர்யவன்ஷி தொடர்ந்து 3 போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. நேற்றைய போட்டிகளில் 15 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 16 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 4 ரன்களில் வெளியேறினார். எனினும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாகப் போராடினார். இறுதிவரை ஆட்டமிழக்காத அவர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 13.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை இழந்து வெற்றிபெற்றது. அவ்வணியில் பிலிப் சால்ட்டும் ஹாரி ப்ரூக்கும் இணைந்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தனர். சால்ட் 59 ரன்கள் எடுத்தார்.
ஹாரி 79 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தொடரை வென்றது. இதன்மூலம், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு மகத்தான சாதனையை இந்திய அணி மீண்டும் படைத்தது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணி அடுத்தடுத்து, இரண்டு டி20 தொடர்களை இழந்தது. அப்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், அதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் இந்தியா தொடரை இழந்தது. தற்போது அயர்லாந்திடம் 0-2 எனத் தோற்ற இந்திய அணி, இங்கிலாந்திடம் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கான கடைசி டி20 போட்டி, நாளை நடைபெற இருக்கிறது.

