ICC கொண்டுவந்த புதிய விதி.. கொந்தளிக்கும் அசோசியேட் நாடுகள்.. பின்னணி என்ன?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஐசிசி அமைப்பு தொடர்ந்து பெரிய அணிகளுக்குச் சாதகமாகவே செயல்படுகிறது என்ற விமர்சனம் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிறது. அதனை உண்மையாக்கும் வகையில் ஐ.சி.சி திடீரென கொண்டுவந்துள்ள மாற்றம் அசோசியேட் எனப்படும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க 'சூப்பர் சீரிஸ் ஸ்டேஜ்' என்ற சுற்றை தாண்டித்தான் அசோசியேட் அணிகள் வரவேண்டும் என விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, 11 அணிகள் நேரடியாக தகுதிபெறும் நிலையில், 12-ஆவது இடத்துக்கான தகுதிச்சுற்றுகளில் 12, 13 மற்றும் 14-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் தங்களுக்குள் ஒரு முத்தரப்புத் தொடரில் விளையாடி, அதில் முதலிடம் பிடிக்கும் அணி மட்டுமே உலகக் கோப்பை தொடருக்குள் நுழைய முடியும் என விதி கொண்டுவரப்படவுள்ளது.
ஐசிசி-யின் இந்தப் புதிய விதிமுறைக்கு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரு வாரியங்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "தகுதிச் சுற்றுக்கான போட்டித் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே, நடுவழியில் விதிகளை மாற்றுவது எங்களின் பல வருடக் கடின உழைப்பைத் வீணாக்குவதை போன்றது. இந்தத் திடீர் முடிவு வளர்ந்து வரும் அசோசியேட் நாடுகளுக்கு பின்னடைவைத் தரும். உலகக் கோப்பை தொடங்க இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் அணிகளைப் பெறும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

