20,000 ரன்கள் மைல்கல்.. சச்சின், கோலி, டிராவிட் வரிசையில் இணைந்தார் ரோகித்!
ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் கடந்த 14வது வீரராகவும், 4வது இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். சச்சின், கோலி, டிராவிட் போன்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்துள்ளார். 2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் நிலையில், அவரது ஃபார்மும் உடற்தகுதியும் பிசிசிஐயின் கவனத்தை ஈர்க்கின்றன.
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகின்றனர். 2027 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியாவிற்காக வெல்லவேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் இருவரும், அதற்காக தயார்படுத்தி வருகிறார்கள்..
ஆனால் இருவருக்கும் தற்போது 37 மற்றும் 38 வயதாகும் நிலையில், 2027 உலகக்கோப்பையில் அவர்களின் வயதுமுதிர்வு மற்றும் உடற்தகுதி போன்றவற்றால் அவர்களை அழைத்துச்செல்லவேண்டுமா என்ற குழப்பத்தில் பிசிசிஐ இருக்கிறது..
இந்தசூழலில் இருவர் மீதான பிசிசிஐயின் சந்தேகமும் பெரிய விவாதப்பொருளாக இருந்துவரும் சூழலில், ரோகித் மற்றும் கோலி இரண்டு பேரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தி தங்களை நிரூபித்துள்ளனர்.
ரோகித் சர்மாவிற்கு 2027 உலகக்கோப்பையின் போது 40 வயது எட்டியிருக்கும் என்பதால், அவர் உடற்தகுதி மற்றும் ஃபார்ம் மீதான சந்தேகத்தில் இருக்கிறது பிசிசிஐ. ஆனால் தன்னுடைய எடையில் 10 கிலோவை குறைத்திருக்கும் ரோகித் சர்மா, தற்போது சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்..
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 75 ரன்களை அடித்த ரோகித் சர்மா 27 ரன்களை கடந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் கடந்த வீரராக சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களை கடந்த 14வது வீரராகவும், 4வது இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார் ஹிட்மேன்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 34357 ரன்கள், விராட் கோலி 27910 ரன்கள், ராகுல் டிராவிட் 24208 ரன்களுடன் இருக்கின்றனர்.

