உலகக் கோப்பை | தொடரும் 'விலகல்' சர்ச்சைகள்.. அணிகள் விளையாட மறுத்த முக்கியச் சம்பவங்கள்.!
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் T 20 உலக கோப்பை போட்டி வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது, ஏற்கனவே இந்தியாவில் வந்து உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை மறுத்ததால் உலக கோப்பையில் இருந்து வங்கதேச அணி வெளியேறிய நிலையில் தற்போது இந்தியாவிற்கு எதிரான T 20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்று அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது மிக பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதேபோல முந்தைய உலக கோப்பையில் நடைபெற்ற சம்பவங்களை பார்க்கலாம்.
1996 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து 1996 உலகக் கோப்பையை நடத்தின, ஆனால், இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவி வந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் கொழும்புவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இலங்கைக்கு செல்ல மறுத்தன. கொழும்புவில் நடைபெறவிருந்த இலங்கைக்கு எதிரான குழு போட்டிகளில், இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காததால், அந்தப் போட்டிகள் இலங்கைக்கு வாக்கோவராக அறிவிக்கப்பட்டன.
2003 உலகக் கோப்பை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய மூன்று நாடுகளில் இணைந்து நடத்தப்பட்டது. தொடக்கப்போட்டியாக ஹராரேவில் நடைபெறவிருந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட மறுத்தது. ராபர்ட் முகாபே தலைமையிலான ஜிம்பாப்வே அரசுக்கு எதிராக பிரிட்டன் அரசு கொண்டிருந்த நிலைப்பாடு காரணமாக, இங்கிலாந்து அணிக்கு மரண மிரட்டல்கள் வந்ததாக கூறி பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தது. அதேபோல், நியூசிலாந்து அணி கென்யாவுக்கு பாதுகாப்பு காரணங்களால் செல்லவில்லை இந்த இரண்டு போட்டிகளையும் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என முயற்சி செய்யப்பட்டாலும் அது நடக்கவில்லை.
இதன் காரணமாக, ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளுக்கு அந்தந்த போட்டிகளின் புள்ளிகள் வழங்கப்பட்டன. 2009 டி20 உலகக் கோப்பை முழுவதும் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே அணி வர இயலாத நிலை ஏற்பட்டது. இரு நாடுகளின் அரசியல் முரண்பாடுகள் காரணமாக, ஜிம்பாப்வே வீரர்களுக்கு விசா வழங்கப்படாமல் போகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், ஜிம்பாப்வே அணி போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி தொடரில் இடம் பெற்றது. அதே நேரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு அவர்களின் முழு பங்கேற்புக் கட்டணமும் வழங்கப்பட்டது.

