கவாஸ்கர் கருத்து இழிவானது.. ‘இனிவெறியர்கள்’ என பதிவிட்ட பாகிஸ்தான் வம்சாவளி வீரரால் சர்ச்சை!
பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவை இந்திய உரிமையாளர் அணியான சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். அவர், பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை அந்நாட்டின் தீவிரவாத செயல்களுக்கு செல்கிறது என கூறியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து வீரர் அஜீம் ரஃபீக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் கடுமையாக எதிர்வினை தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சன் குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் நேரடியாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டார். இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை இந்திய மதிப்பில் ரூ.2.34 கோடிக்கு அந்த அணி வாங்கியது. இதன்மூலம் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்ற எழுதப்படாத விதியை அந்த அணி முதல்முறையாக மாற்றியது.
இந்தசூழலில் பாகிஸ்தான் வீரருக்கு இந்திய உரிமையாளர்கள் சம்பளம் கொடுப்பது குறித்து கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர், “பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை, இறுதியில் வருமானவரி மூலம் அந்நாட்டு அரசாங்கத்துக்குச் செல்கிறது. அந்தப் பணம், ஆயுதங்களை வாங்குவதற்கு வழிவகை செய்கிறது. பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையானது மறைமுகமாக இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு பங்களிக்கிறது” என கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் கவாஸ்கரின் கருத்திற்கு பாகிஸ்தானில் பிறந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அஜீம் ரஃபீக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கவாஸ்கரின் கருத்து முற்றிலும் அபத்தமானது, இது கண்டிக்கப்பட வேண்டும். இந்தக் கருத்துகள் எப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கவை? நீங்கள் எத்தனை ரன்கள் எடுத்தீர்கள் என்பது எனக்குக் கவலையில்லை. கவாஸ்கரின் அருவருப்பான செயல்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் ரஃபீக்கின் கருத்திற்கு இந்திய ரசிகர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றிவருகின்றனர். இந்திய ரசிகர் ஒருவர், “முஸ்லிம் அல்லாதவரா என பார்த்து சுட்டுக் கொல்லப்பட்ட பெல்காம் தாக்குதல் உட்பட, இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானே பொறுப்பு. இந்தியர்கள் ஏன் பாகிஸ்தானியர்களுக்கும் அவர்களின் பயங்கரவாதச் செயல்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும்?” எனவும்,
மற்றொருவர் ‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒரு அரசுக் கொள்கையாகப் பயன்படுத்துவதை நிறுத்தும் வரை, அவர்களால் இந்தியாவிடமிருந்தோ அல்லது இந்தியர்களிடமிருந்தோ இயல்பு நிலையை எதிர்பார்க்க முடியாது. அங்கீகாரத்திற்காகக் கெஞ்சுவதை நிறுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தன் மீதான எதிர்வினைகள் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் இந்திய கட்டுரை லிங்கை பகிர்ந்திருக்கும் அஜீம் ரஃபீக், “இனவெறியர்களால் துன்புறுத்தப்படுவது எனக்குப் பழகிவிட்டது, இது ஒன்றும் புதிதல்ல” என பதிவிட்டுள்ளார்.

