
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் 14.20 கோடி ரூபாய்க்கு ஏலம்போன கார்த்திக் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன அறிமுக வீரர் என்ற சாதனை படைத்த கார்த்திக் சர்மா, தன்னுடைய அதிரடி பேட்டிங்கிற்காக கவனம் பெற்றுள்ளார்.
அதிலும் மிடில் ஆர்டரில் 160 ஸ்ட்ரைக்ரேட்டில் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்கும் இவருடைய திறமை, பல அணிகளை ஏலத்தில் போட்டிப்போட செய்தது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் சர்மா, ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் அடித்து விளாசினார். இவருடைய அபாரமான பேட்டிங் திறமை மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணிக்கு இருக்கும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மற்றொரு வீரர் பிரசாந்த் வீர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர், உத்திரபிரதேச டி20 லீக்கில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்ற பிறகு சென்னை ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடரில் 155.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 320 ரன்கள் அடித்து இவர், முக்கியமான போட்டிகளில் ஃபினிசிங் வீரராக மாறி பல போட்டிகளை அணிக்காக முடித்துக்கொடுத்தார்.
மேலும் கட்டுக்கோப்பான இடது கை சுழற்பந்துவீச்சில் 6.69 என்ற எகானமி உடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அவருடைய பவுலிங் சிஎஸ்கேவில் இருக்கும் ஜடேஜாவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் ஒரு வீரராக பிரசாந்த் வீரை மாற்றியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் நேரடியாக பிளேயிங் 11-ல் வீர் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2026 ரஞ்சிக்கோப்பை தொடரில் தனியொரு ஆளாக ஜம்மு-காஷ்மீரை கோப்பை வெல்லவைத்த பெருமை வலதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அகிப் நபி தர்-ஐ சேரும்.
2026 ரஞ்சிக்கோப்பையில் வெறும் 12 சராசரியில் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளராக மாறிய அகிப் நபி, தன்னுடைய இன்ஸ்வின் மற்றும் அவுட் ஸ்விங் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமையை கொண்டுள்ளார்.
புதிய பந்தில் விக்கெட் வீழ்த்தும் இவருடைய திறமை பல அணிகளை இவருக்காக போட்டிபோட வைத்தது. பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் நபி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். அவரால் கடைசியில் இறங்கி பெரிய சிக்சர்களையும் அடிக்க முடியும். 2026 ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை விலைக்கு வாங்கியுள்ளது.
சமீபத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் 148-150 கிமீ வேகத்தில் தொடர்ந்து வீசக்கூடிய பவுலராக இருப்பவர் அசோக் சர்மா. ராஜஸ்தானை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான அசோக் ஷர்மா, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக வலைப்பயிற்சியில் பந்து வீசிய பிறகு, 2022-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக 55 லட்சம் ரூபாய்க்கு ஐபிஎல் ஒப்பந்தத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால், அவருக்கு KKR அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் RR அணிக்கே திரும்பினார். 2025-ல் நடைபெற்ற மெகா ஏலத்தில், RR அணி அவரை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அங்கேயும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து 3 சீசன்களாக பெஞ்சில் அமர்ந்திருந்தபோதிலும், 2026 சையத் முஷ்டாக் அலி தொடரில் தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் கவனம் ஈர்த்த அசோக் சர்மா, 2026 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். சரியான அங்கீகாரத்திற்காக போராடும் அசோக் சர்மா 2026 ஐபிஎல் தொடரில் கவனக்கிப்பட கூடிய அறிமுக வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.