டான் பிராட்மேனுக்கு பிறகு ஜெய்ஸ்வால் மட்டுமே படைத்த சாதனை!
டான் பிராட்மேனுக்கு பிறகு இரண்டாவது வீரராக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தலான சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 வீரர்கள் சதமடித்து அசத்தினர். 448 ரன்கள் அடித்து டிக்ளார் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை 162 மற்றும் 146 ரன்களில் சுருட்டி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பிராட்மேனுக்கு பிறகு ஜெய்ஸ்வால்..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் 35 ரன்னில் வெளியேறினாலும், 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் சுதர்சன் கூட்டணி 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது.
சதமடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தபோது 87 ரன்னில் அவுட்டான சுதர்சன் ஏமாற்றினார். ஆனால் மறுமுனையில் 19 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடிவரும் ஜெய்ஸ்வால் 7வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் அவர் 150* ரன்களை பதிவுசெய்து விளையாடிவருகிறார்.
இதன்மூலம் 23 வயதான ஜெய்ஸ்வால், 23 வயதிற்குள் 8 முறை 150+ ரன்கள் அடித்த டான் பிராட்மேனுக்கு பிறகு 2வது வீரராக 5 முறை அடித்து சாதனை படைத்தார்.