கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
தற்போது 2025 ஆசியக்கோப்பை தொடரில் விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் ஆசியக்கோப்பை முடித்த கையோடு, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்ச் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இந்தியா. அதற்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.
கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கம்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2-ம் தேதி அகமதாபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10-ம் தேதி டெல்லி மைதானத்திலும் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள அணியில் ஜகதீசன் மற்றும் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடரில் ஒரு அங்கமாக இருந்த கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதுபோல அபிமன்யு ஈஸ்வரனுக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. கருண் நாயரின் மோசமான ரன்களுக்கு பிறகு அவர் நீக்கப்பட்டிருந்தாலும், ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்காமல் அபிமன்யு ஈஸ்வரனுக்கு அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா