இந்தியா vs பாகிஸ்தான்| 77 ரன்கள் அடித்து மிரட்டிய இஷான்.. 175 ரன்கள் குவித்த இந்தியா!
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், இஷான் கிஷன் 77 ரன்கள் அடித்து இந்திய அணியை 175 ரன்கள் சேர்க்க உதவினார். பாகிஸ்தான் அணியின் சைம் ஆயுப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியானது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வுசெய்தார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
175 ரன்கள் அடித்த இந்தியா..
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். முதல் ஓவரிலேயே ஸ்பின்னரை இறக்கிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, அவரே ஓவரை வீசி அபிஷேக் சர்மாவை வெளியேற்றினார்.
ஒருபக்கம் அபிஷேக் சர்மா 0 ரன்னில் வெளியேற, அதற்குபிறகு வந்த திலக்வர்மாவும் பாகிஸ்தான் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறினார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் 40 பந்தில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 77 ரன்கள் அடித்து அசத்தினார்.
ஒருகட்டத்தில் 200 ரன்களை இந்தியா அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் அவுட்டாகி வெளியேறிய பிறகு பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கடைசியில் ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 1 சிக்சர், ரிங்கு சிங் 1 பவுண்டரி 1 சிக்சர் என அடிக்க இந்தியா 20 ஓவரில் 175 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சைம் ஆயுப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

