IND Vs ENG | இன்றைய போட்டியில் இந்தியா தோற்றால்.. 2019இல் நடந்த அதே வரலாறு.. ஸ்ரேயாஸுக்கு தலைவலி!
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அதிலும் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெறும் 76 ரன்களில் சுருண்டு சாதனை படைத்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அதிலும், இந்திய கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், தனது 5 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறவில்லை . பொறுப்பேற்ற முதல் ஐந்து சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெறாத எட்டாவது இந்திய கேப்டன் ஆனார், ஸ்ரேயாஸ். இதனால், அணி மீதும் அவர் மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான 4ஆவது போட்டி, இன்று இரவு 10 மணிக்குத் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி, கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம், இன்னும் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றால்தான் தொடரைச் சமன் செய்ய முடியும். இல்லையென்றால், தொடரை இழக்கும். ஒருவேளை, இந்திய அணி இன்றைய போட்டியிலும் தோல்வியைத் தழுவினால், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு மகத்தான சாதனையை மீண்டும் படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணி அடுத்தடுத்து, இரண்டு டி20 தொடர்களை இழந்தது. அப்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், அதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் இந்தியா தொடரை இழந்தது. தற்போது அயர்லாந்திடம் 0-2 எனத் தோற்ற இந்திய அணி, இங்கிலாந்திடம் 2 போட்டிகளில் தோற்று 0-2 எனப் பின்தங்கியுள்ளது. இதனால், 4-ஆவது போட்டியில் தோற்றால் தொடரை இழப்பதுடன், 7 ஆண்டுகளுக்கு முந்தைய அதே மோசமான சாதனையை இந்தியா மீண்டும் படைக்க நேரிடும். இது, புதிய கேப்டன் ஸ்ரேயாஸுக்கு தலைவலியை உண்டாக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

