”எனக்கான சம்பளம் இன்னும் வரல..” பாக். நிர்வாகத்தை அம்பலப்படுத்திய Ex Coach!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஜேசன் கில்லெஸ்பி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் (PCB) அதன் தலைமைத் தேர்வாளர் ஆகிப் ஜாவேதையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சமீபகாலமாக தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இத்தோல்விக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, 7 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. தவிர டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளரான சர்ஃபராஸ் அகமது, பந்துவீச்சுப் பயிற்சியாளரான உமர் குல் ஆகியோரும் நீக்கப்பட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அவசர முடிவுகளால் அதிருப்தியடைந்த மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு பதவியை ராஜினாமா செய்தார். இது, பாகிஸ்தானில் மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகச் சிலகாலம் பணியாற்றியவருமான ஜேசன் கில்லெஸ்பி அவ்வணி நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணமாக இருப்பவர் ஆகிப் ஜாவேத். அவர் அந்தப் பதவியில் இருக்கும்வரை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்ந்து பின்னோக்கியே செல்லும். பாகிஸ்தான் வாரியத்தில் எனக்குக் கிடைத்த அனுபவம் என்னை முற்றிலுமாகச் சோர்வடையச் செய்தது. பயிற்சியாளர் பணியின் மீதே எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இது, என்னை மனரீதியாகப் பாதித்து, என் மீது எனக்கே சந்தேகத்தை உண்டாக்கியது. கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எனக்குள் எழுப்பியது. நான் அங்கு முற்றிலும் அவமதிக்கப்பட்டேன். எனது அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஆகிப் ஜாவேத்தான் காரணம்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எப்போதும் செய்து வந்த, மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியதற்காகவே நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன். தனது பயிற்சிப் பணிகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் ஆயிரக்கணக்கான டாலர்களை சம்பள நிலுவையாக வழங்காமல் வைத்துள்ளது. நான் அமைதியாக இருந்து எனது சம்பளத்தைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அது, இத்தனை ஆண்டுகளாக, தாம் கட்டமைத்திருந்த குணத்திற்கும் நற்பெயருக்கும் செய்யும் ஒரு தீங்காக அமைந்திருக்கும். அதற்காக, என் கொள்கைகளில் நான் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை. என் தொழில் வாழ்க்கை முழுவதும் நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை, நிச்சயமாக மாற்றிக்கொள்ளவும் போவதில்லை” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

