”இந்தியாகிட்ட கத்துக்கோங்க..” பாக். கிரிக்கெட் வாரியத்தைக் கடுமையாகச் சாடிய முன்னாள் கேப்டன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, முஹம்மது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, ஆமிர் ஜமால், குர்ரம் ஷாசாத், அலி உஸ்மான், முஹம்மது அவைஸ் ஜாபர் ஆகிய 7 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அதேபோல், டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளரான சர்ஃபராஸ் அகமது, பந்துவீச்சுப் பயிற்சியாளரான உமர் குல் ஆகியோரும் நீக்கப்பட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அவசர முடிவுகளால் அதிருப்தியடைந்த மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு பதவியை ராஜினாமா செய்தார். இது, பாகிஸ்தானில் மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய மிஸ்பா உல் ஹக், "இந்தியா தனது கிரிக்கெட் கட்டமைப்பை மேம்படுத்த நீண்டகாலம் எடுத்துக்கொண்டது. 90-களுக்குப் பிறகு அவர்கள் முறையான திட்டமிடல் மற்றும் படிப்படியான முதலீடுகளைச் செய்து ஒரு நிலையான அணியை உருவாக்கினர். குறுகிய காலத்தில் அவசரமாக எடுக்கும் முடிவுகள் எதற்கும் தீர்வாகாது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருவேறு விதமாக நடத்தப்படுகின்றனர். வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுக்கு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு மென்மையான போக்கு உள்ளது. ஆனால் உள்ளூர் பயிற்சியாளர்கள் மட்டுமே கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அழுத்தத்தின் காரணமாக நாம் பீதியடைந்து அழகு அறுவைசிகிச்சை செய்துகொள்ளக் கூடாது. செயல்பாடுகளையும் சூழ்நிலையையும் ஆராய்ந்து, அதன்பிறகு எவ்வாறு முன்னேறுவது என்று முடிவு செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நாம் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கே பழகிவிட்டோம்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

