நடப்பு ஆண்டு இளைஞர்களுக்கான (ஏ அணி) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடிய நிலையில், இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் அடுத்தடுத்து நடந்த அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்று இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க பேட்டர்கள் முதல் நடுநிலை வீரர்கள் என சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இதன் விளைவாக அவ்வணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டயாப் தஹிர் சதம் அடித்தார். அவர், 71 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸ்ருடன் 108 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதைத் தொடர்ந்து மிகவும் கடினமான இலக்கை நோக்கி இந்திய ஏ அணி களமிறங்கியது. கடந்த இதே பாகிஸ்தானுக்கான லீக் போட்டியில் செஞ்சுரி அடித்து அணியை வெற்றிபெற தமிழக வீரரான சாய் சுதர்சன் மீது இந்த முறையும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் 29 ரன்களிலேயே நடையைக் கட்டியது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாகியது.
மறுமுனையில் அபிஷேக் ஷர்மா 69 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை இழந்ததால், இந்தியாவின் தோல்வி உறுதியானது. அது, 40 ஓவர்களில் அனைத்தும் விக்கெட்களையும் இழந்து வெறும் 224 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.