டிராவிட், சேவாக் மகன்கள் தேர்வு! நீக்கப்பட்ட சூர்யவன்ஷி.. என்ன காரணம்?
இந்தியா-ஆஸ்திரேலியா யு19 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட், விரேந்தர் சேவாக் மகன் ஆர்யவிர் சேவாக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கூச் பெஹார் கோப்பையில் 297 ரன்கள், டெல்லி பிரீமியர் லீக்கில் அதிரடி ஆட்டம் காட்டிய ஆர்யவிர், இலங்கை யு19 சுற்றுப்பயணத்தில் 87 ரன்கள் குவித்த அன்வே ஆகியோரின் தேர்வு கவனம் ஈர்க்கிறது. ஆனால் சூர்யவன்ஷி இடம்பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் ஆஸ்திரேலியா யு19 அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், யு19 இந்திய அணியில் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட்டின் மகனான அன்வே டிராவிட் மற்றும் விரேந்தர் சேவாக்கின் மகனான ஆர்யவிர் சேவாக் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
தந்தை சேவாக்கை போலவே ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஆர்யவிர் சேவாக், 2026 டெல்லி பிரீமியர் லீக் தொடரில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் சேவாக்கின் திறமையுடன் ஒப்பிடப்படும் ஆர்யவிர், கடந்த 2024ஆம் ஆண்டு கூச் பெஹார் கோப்பையின் போது மேகாலயாவுக்கு எதிராக 297 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தார்.
அதேபோல தந்தை டிராவிட்டை போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அன்வே டிராவிட், கடந்த இலங்கை யு19 சுற்றுப்பயணத்தின் போது 87 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்த 2 ஜாம்பவான்களின் மகன்களும் இந்திய யு19 ஒருநாள் அணியில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி இந்திய யு19 அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் உலகையே தன் அபார திறமையால் மிரட்டிவரும் சூர்யவன்ஷியின் பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், எதிர்வரும் யு19 உலகக்கோப்பைக்கான சுழற்சியின் ஒருபகுதியாக இருக்கும் இந்த தொடரில் விதிமுறையின் படியே அவர் இடம்பெறவில்லை என தெரிகிறது.
என்ன காரணம்?
2026 யு19 ஒருநாள் உலகக்கோப்பையை சூர்யவன்ஷி வென்றிருந்தார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாரபட்சமின்றி அவர் அடித்த 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் இந்தியாவிற்கு உலகக்கோப்பையை தேடித்தந்தது. இந்தசூழலில் தான் ஒரு குறிப்பிட்ட பிசிசிஐ விதியின் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
கடந்த 2016-ஆம் ஆண்டு, வீரர்கள் தகுதி பெற்றிருந்தாலும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட யு19 உலகக் கோப்பைகளில் பங்கேற்பதை பிசிசிஐ தடை செய்தது. இந்த விதியின் காரணமாகவே சூர்யவன்ஷி தேர்வுசெய்யப்படவில்லை, இதே விதிமுறையின் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு வாஷிங்டன் சுந்தரால் யு19 உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை. அதற்கு முன்பு சர்பராஸ் கான், சந்தீப் சர்மா உள்ளிட்ட பலரும் விளையாட முடியாமல் போயுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஆடவர் அணிக்கான அறிமுகம் பெற்றிருக்கும் சூர்யவன்ஷி, இதற்குபிறகான எந்த யு19 திட்டங்களிலும் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன..

