8 அணிகள் பங்கேற்பு.. இன்று தொடங்கும் ஆசியக் கோப்பை தொடர்!
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது.
அனல் பறக்கும் அமீரக நாடுகளில் சிக்சர் மழையை காணத் தயாராகி விட்டனர் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள். 28-ஆம் தேதி வரை களைகட்டவுள்ள ஆசியக் கோப்பை தொடரில் 8 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இதில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் உள்ளன. பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் உள்ளன. துபாய் மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இன்று தொடங்கும் லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 19ஆம் தேதி வரை துபாயில் நடைபெறவுள்ளது. வரும் 10ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 14ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி இந்திய-ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. லீக், சூப்பர் ஃபோர், இறுதியாட்டம் என இந்திய-பாகிஸ்தான் அணிகள் மும்முறை மோதவுள்ளதால் ஆசியக் கோப்பை மீது ஏக எதிர்பார்ப்பு நிலவுகிறது. செப்டம்பர் 20 தொடங்கி 26-ஆம் தேதி வரை சூப்பர் ஃபோர்ஸ் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தத்தில் செப்டம்பர் மாதம் கிரிக்கெட் சரவெடியை காண கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.