T20 WC விவகாரம் | ”பாகிஸ்தானுக்கு தைரியம் இல்லை” - கடுமையாகச் சாடிய அஜிங்க்யா ரஹானே!
பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் "டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தைரியம் இல்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. எனினும் அதுகுறித்து பாகிஸ்தான் அரசு முடிவு எடுக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த நக்வி , ”அணி பங்கேற்பது குறித்து ஜனவரி 30 அல்லது பிப்ரவரி 2ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், "டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தைரியம் இல்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிப்பது குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் இருந்தபோதிலும், அந்த வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் ஏற்கெனவே கொழும்புக்குச் செல்ல விமானங்களை முன்பதிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்டின் அறிக்கையின்படி, சல்மான் அலி ஆகா தலைமையிலான அணி ஆஸ்திரேலிய அணியுடன் கொழும்புக்கு பறக்க உள்ளது. இந்தியா, நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் A பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது.
முன்னதாக, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை தொடரைப் புறக்கணிப்பு குறித்த ஊகங்களுக்கு மத்தியில் ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியை கிண்டல் செய்திருந்தது. வங்கதேசத்தைப் போல கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணியிலிருந்து விலக முயற்சித்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் எச்சரித்திருந்தது.

