பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்.. 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொலை! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!
பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே எல்லைத்தாண்டிய தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கிரிக்கெட் வீரர்கள் கொலை..
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று ஒரு சோகமான செய்தியை பகிர்ந்துள்ளது. அந்த செய்தியில், பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் பதிவில், பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததாகவும், அதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளது.
இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்தில், உர்குன் மாவட்டத்தைச் 3 கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் உட்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், வீரர்கள் நட்பு ரீதியிலான போட்டியில் பாக்டிகா மாகாணத்திற்கு விளையாடசென்று உர்குனுக்கு வீடு திரும்பிய போது கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் 3 கிரிக்கெட் வீரர்களின் இழப்பை பெரிதாக மதிப்பதாக தெரிவித்துள்ள வாரியம், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்தாண்டு நவம்பரில் பாகிஸ்தானில் நடக்கவிருந்த பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.