உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் விரைவில் கைது.. இலங்கை அரசு தீவிரம்! என்ன காரணம்?
இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, 1996 உலகக்கோப்பை வெற்றியாளர், பெட்ரோலியத் துறையில் ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட இருக்கிறார். அவர் மற்றும் அவரது சகோதரர் தம்மிகா, எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது, நாட்டில் ஊழலை ஒழிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அர்ஜுனா ரணதுங்கா. இவர், கேப்டனாக இருந்தபோதுதான் அந்த அணி, 1996ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில், பெட்ரோலியத் துறை அமைச்சராக அர்ஜுனா ரணதுங்கா இருந்த காலத்தில் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட இருக்கிறார். ரணதுங்காவும் அவரது சகோதரரும் நீண்டகால எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான நடைமுறையை மாற்றியதாகவும், அதிக விலைக்கு உடனடி கொள்முதல் செய்ததாகவும் ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
’2017-இல் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நேரத்தில், 27 கொள்முதல் மூலம் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் ரூ. 23.5 கோடி' என ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து ரணதுங்கா கைது செய்யப்பட இருப்பதாக நீதிமன்றத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அர்ஜுனா ரணதுங்கா தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், அர்ஜுனா ரணதுங்காவின் மூத்த சகோதரரும், அப்போதைய அரசிற்குச் சொந்தமான இலங்கை பெட்ரோலியக் கூட்டு ஸ்தாபனத்தின் தலைவருமான தம்மிகா ரணதுங்கா, கடந்த 15ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள இவர், வெளிநாடு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டில் நிரம்பியிருக்கும் ஊழலை ஒழிப்பதாகத் தேர்தல் பிரசாரத்தின்போது உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஒரு பரந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ரணதுங்கா சகோதரர்களில் மற்றொருவரும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்னா, கடந்த மாதம் காப்பீட்டு மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் அதற்கு முன்னர் ஜூன் 2022இல் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பணம் பறித்த வழக்கிற்காக தண்டிக்கப்பட்டார். அவர் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

