கணவருடன் உறவைக் கட்டமைக்க முயற்சி.. பிரியும் முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!
ஒலிம்பிக்கில் 2012ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றவரும், பேட்மின்டனில் உலக நம்பர் 1 தரவரிசையைப் பெற்ற ஒரே இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவருமான சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டுப் பிரிவதாக, கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம்.
இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி” என அதில் பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரத்தில், சாய்னா நேவாலின் பிரிவு குறித்த கருத்துக்கு பாருபள்ளி காஷ்யப் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. இப்படியான சூழலில்தான், தனது முடிவைக் கைவிட்டுள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். தனது கணவர் பருபள்ளி காஷ்யப்புடன் இருக்கும் புகைப்படத்தை, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், ’சில நேரங்களில் தூரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இருப்பதன் மதிப்பை புரிய வைக்கிறது’ எனக் கூறியுள்ளார். மீண்டும் தங்களது உறவை, கட்டமைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.